Saturday, September 26, 2015

தமிழுக்கும் அமுதென்று பேர் !



தமிழுக்கும் அமுதென்று பேர் !
============================================ருத்ரா இ.பரமசிவன்


நிழல்  குளிக்கும் கனவுகள் !
பின்னணியில்
நீலச்சதை பிதுங்கி
இந்த கீற்றுகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட ஆர்வங்கொண்டு
சிலு சிலுக்கிறது.
இளநீர்க்குலைகள் ஒவ்வொன்றும்
தென்னையின் சொப்பனங்கள் .
மனிதனின் தாகம் தீர்க்க
அரிவாளால் சிரச்சேதம் செய்யப்பட
காத்திருக்கிறது.
யாரைக்கே ட்டார்கள் ?
எதைக்கேட்டார்கள்?
இந்த மண்ணையா?
அந்த மட்டைகளையா?
அதுவும்
இலங்கையின் தென்னைமரங்களின்
இளநீர் அவ்வளவும்
தமிழனின் ரத்தம்.
காற்று இடைவெளியிலும்
நஞ்சு ஊற்றும்
சிங்கள இனவெறி தான்.
பூமியின் அடியின் வேர்த்தூவிகள்
அத்தனையும்
தமிழின் உதிரம் குடி த்தவை.
மிச்சமான எலும்பு மஜ்ஜைக்குள்ளும்
விடுதலையின்  தாக உறுமல்கள்
கேட்கின்றனவோ!
தென்னை மரம் எங்கிருந்தால் என்ன?
தலை விரிகோலமாக அதன் கூந்தல்கள்
சிலிர்ப்பது
ஒற்றைச்சிலம்பு ஆதாரம் கொண்டு நிற்கும்
ஒரு சீற்றத்தின் உருவகமாக   தெரிகிறது.
உலகத்து மண்ணின்
அடிக்குழம்பு
லாவாவில் இருந்து அல்லவா
தமிழின் "அகர முதல "ஒலிக்கிறது!
ஐநா மன்றத்தின்
செவிட்டு  சன்னல்களையும் தாண்டி
இது எதிரொலித்தே தீரும்!
இருப்பினும்  இந்த
இளநீரின் கண்ணீரும்
இனிக்கத்தான் செய்கின்றது !
ஏனெனில்
தமிழுக்கும் அமுதென்று தானே பேர் !

============================================