Friday, July 29, 2016

பௌர்ணமி
















பௌர்ணமி
__________________________________


அழகிய
முகப்பருக்களோடு
வானத்தில் அவள்.

__________________________________


கிரில் ஜன்னல் வழியே
அவளோடு
கண்ணாமூச்சி.


__________________________________


அவள் கைவிரல் கொண்டு
பொத்தி பொத்தி
பதினைந்து நாளாய் அவஸ்தை.

___________________________________


என் இதயத்துள் சிம்னிவிளக்கு
விடியும் வரை கடலுக்கு
அவள் விடிவிளக்கு.


_________________________________________


எனக்கு கேட்கிறது.
அலை பிம்பத்தோடு
குலுங்கி குலுங்கி அவள் சிரிப்பு.


_________________________________________


கருப்பு பர்தாவில் அமாவாசை.
வெள்ளைப் பர்தாவில் பௌர்ணமி.
என்று அவள் நிஜப்புன்னகை?


__________________________________________

Sunday, July 24, 2016

மீண்டும் ஒரு அலை






மீண்டும் ஒரு அலை
==============================ருத்ரா
ஏதும் தோன்றவில்லை.
எதிரே
இரைச்சல் போடும்
அலைகள் கேட்கவில்லை.
மூழ்கப்போகும்
சூரியன் கூட‌
ஏதோ சொல்லத்துடித்து
சொல்லாமல்
சிவப்பாய் கக்கிவிட்டு
கரைந்து விட்டான்.
என்ன சொன்னாள்?
அந்த ஒலி மட்டும்
கோடரியாய்
என் நெஞ்சை பிளந்து விட்டது.
அந்த சொல்
இன்னும் விளங்கவில்லை.
விளங்காமலேயே
போய்விடக்கூடாது
என்று
அலைகள் தன் முந்தானையைக்கொண்டு
இந்த கரை முகத்தை
ஒற்றிவிட்டு ஒற்றிவிட்டுப்போகுமே
அங்கு..
தன் விரல்களால்
எழுதி விட்டுச் சென்றிருக்கிறாள்..
எழுத்துக்கள் அழிந்து
மிச்சம் தெரிந்தது
இது மட்டுமே..
...விடு."
மறந்து விடு
மன்னித்து விடு
உன் மனதை தந்து விடு.
எந்த "விடு" அது?
எதுவும் தோன்றவில்லை.
என்ன விடுகதை இத
தொடவும் மாட்டேன் என்கிறது
விடவும் மாட்டேன் என்கிறது
மீண்டும் ஒரு அலை
அந்த "விடு"வுக்கும் விடுதலை.
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
மிச்சம் உள்ள எழுத்துக்களை
அந்த ஆழத்துக்குள் தேடிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு அலை..
வரட்டும்.
என்னை இழுத்துக்கொன்டு போக!

============================================





============================================

Sunday, July 17, 2016

சட்டைகள்




சட்டைகள்
===================================================ருத்ரா

காலப்பரிமாணங்களுக்கு
ஒரு சட்டை தேவைப்பட்டது.
பூவேலைத்தையல்களின்
ஊசிக்கோர்த்தல்களை
கனவு இழைகளாக்கி
என் ரத்த நாளங்களோடு
சேர்த்துக்கொண்டு
மனிதனாய்
இந்த பூமியில் இறங்கினேன்.
தையல் எந்திரம்
கட கடத்துக்கொண்டு  தான்
இருக்கிறது.
காலம் எதைத் தேடுகிறது ?
அதன் கால்தடங்களில்
மனிதக்கபாலங்கள்.
அதற்கு முன்னும்
அடர்ந்த காடுகள் போல்
எலும்புமிச்சங்களை
சிதறடித்து விட்டுப்போன
டி  ரெக்ஸ் டைனோசார்கள்.
மலை போல் தின்று
மலை போல் சாணம் இட்டு விட்டு
காணாமல் போய்விட்ட
பிரம்மாண்ட சதைக்கூடுகள்
விட்டுசென்ற சாசனங்கள்
நம் பொருளாதாரமாய்
நம் முதுகின் மீது...
ஒரு முதலாளியின் கனவு
இந்த உலக உருண்டையை
லாபம் எனும்
கோலா உருண்டையாக்கி
அன்றாட இறைச்சியின்
ருசிக்குள் சுருட்டிக்கொள்வது !
ஓ!காலச் சட்டையே !
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
இவர்களின்
மதங்களுக்குள்.....
கடவுள்களுக்குள் ....
காதல்களுக்குள்....
மனிதத்தையே தின்று
மனிதத்தையே
மலஜலம்  கழித்துக்கொள்ளும்
மிருக வாடை கொண்ட
சட்டங்களுக்குள்
எதை நீ சட்டை செய்யப்போகிறாய்?
கேள்வியின் அடி தாங்காமல்
பாம்பைப்போல
சட்டையை உரித்துப்போட்டுவிட்டு
ஓடுகிறாய்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்!

========================================


ஒரு இனிய பூங்காலை!






ஒரு இனிய பூங்காலை!
===========================================ருத்ரா

எத்தனை எத்தனை கொட்டுகிறாய்?
காது வழியாய்
கண்கள் வழியாய்
உணர்ந்தது வழியாய்
ருசித்தது வழியாய்
புல்லரித்தது வழியாய்
எல்லாம் இங்கே தான் கொட்டுகிறாய்.
காலத்தின் எச்சில்
இங்கு தான் உமிழப்படுகிறது.
இந்த மூளைக்குப்பையில்
நீயும்
தேடுகிறாய் அந்த‌
மூளிப்ப்பொம்மையை.
முகம் மழுங்கி
கண்கள் இன்றி
உன் விளயாட்டுப்பொம்மையை!
அது பிணமா?
உயிர் உள்ளதா?
அது நிழலா? ஒளியா?
எல்லா நூற்றாண்டுகளையும் கொண்டு
பிசைந்து செய்தது தானே அது!
ஆம்!
அதைத்தேடிக்கொண்டே இருக்கிறாய்.
ஒரு நாள் அது
உன் கையில் கிடைத்தது.
ஐயோ!
என்ன இது!
சல்லடையாய் துளைத்து
வெறி நாய்கள் தின்றுக்குதறி போட்ட‌
எலும்பு மிச்சங்கள் போல்
அது அருவருப்பாய்..
சாதிகள் மதங்கள்
மூட நம்பிக்கைகளின்
முடை நாற்றமெடுத்த வர்ணங்கள்
அதன் மீது அப்பி..அழுகிய‌
உருவமாய்..அது!
அது என்ன?
அது யார்?
எல்லாமே நீ தான்!
மூக்கைப்பொத்தாதே
முகத்தைச்சுளிக்காதே
புதிய கபாலம் ஒன்று திற!
புதிய சிந்தனைகளை நிரப்பு.
அந்த நியூரான் நிமிண்டல்களுக்குள்
உன் தேடல்
புதிய "பால் வெளியை" நோக்கி இருக்கட்டும்.
பல்ஸார் குவாஸார் என்று
தொலைதூரங்களை
உன் முகத்தருகே கொண்டுவா!
மானிட நேயம் எனும்
அந்த நுண்ணோக்கியில்
உற்றுப்பார்த்து
புதிய சமுதாயத்தின்
டி.என்.ஏ ,ஆர்.என்.ஏ
உயிர்ச்சங்கிலியை பின்னிவைத்துப்பார்.
குப்பையை கிளறியது போதும்.
உட்பொருள் உணர்.
புதிய பார்வை ஒன்றை
உன்கண்களில் மாட்டிக்கொள்.
நம்பிக்கை பூச்செண்டுகளை
பரிமாறிக்கொள்ள புறப்படு.
உன் காலடிகளில்
பூமியின் இதயத்துடிப்புகள்
உணர்வதைப்பார்.
இதோ
ஒரு இனிய பூங்காலை!

====================================================


Friday, July 1, 2016

புன்னகை தேடி.






புன்னகை தேடி.
==================================ருத்ரா

வேண்டாம் உன் புன்னகை.
அந்த நகையை
என் மனத்தின் "உறைகல்லில்"
உரசி உரசி பார்த்து
"சேதாரம்" எனும்
சோகம் மட்டுமே எனக்கு.
அழகிய நகையாக‌
நீ அலங்கரிக்கப்போகும்
இடம் எது?
கல்விக்கடல் என்று தான்
இந்த கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால் உன் அழகில்
இது இப்போது பெரும்
"ஜொள்"கடல் ஆகிப்ப்போனது.
இதில்
என்னால் எதிர்நீச்சல் போட்டு
உன்னிடம்
கரையேற முடியுமா?
தெரியாது
முடியாது.
ஒழுங்காய் "பட்டம்" வாங்குவோம்
என்று
புத்தகம் புரட்டினேன்.
ஆனால் அந்த‌
தொள்ளயிரத்து சொச்சம் பக்கமும்..உன்
"முத்தொள்ளாயிரம்" ஆனதே!
காதல் ஊறும் போர்க்களத்தில்
கூர்நினைவுகளின் வாள்களுக்கிடையில்
என் கை எங்கே?
கால் எங்கெ?
கூளமாகிப்போன உடலுக்குள்ளிருந்தும்
கூக்குரல் துடித்தது உன்
புன்னகை தேடி.

=========================================










Monday, February 8, 2016

காதலர் தினம்







காதலர் தினம்.
=========================================ருத்ரா இ.பரமசிவன்


ஹார்மோன் என்றார்கள்
நிறையப் படித்த விஞ்ஞானிகள்.
பிரமன் தோட்டத்து
குரங்கு சேட்டைகள் என்றார்கள்
குருக்கள்மார்கள்.
தான் அப்போது குறுகுறுத்து
எதிர் விட்டு சன்னல்கம்பிகளை
கவ்விக்கொண்டிருந்ததை எல்லாம்
மறந்து விட்டு
ரவுடிப்பயல் என்றார்கள்
தந்தைமார்கள்.
பையன் கண்ணின் கருவிழியில்
இது வரை தன்
கருப்பையை பார்த்திருந்து விட்டு
இப்போது அதில்
விஞ்ஞானிகள் குறிப்பிடும்
பேய் உறிஞ்சல்
கருந்துளையை (ப்ளாக் ஹோல்)க்
கண்டு பதறிப்போனார்கள்
அன்னை மார்கள்.
என் பூக்குட்டித் தங்கை
ஒருத்தி மட்டுமே
"ஆல் தி பெஸ்ட் அண்ணா"
என்று
அந்த ஊதாப்பூங்கொத்தை
நீட்டினாள்.
நாம் தொடர்வோம்
அந்த மின்னல் ஊஞ்சல்
விளையாட்டை
கண்ணே !
_____________________________________________________






"அக்னி மீளேம்......







"அக்னி மீளேம்......"
_____________________________________ருத்ரா இ.பரமசிவன்

"அக்னி மீளேம் ப்ரோஹிதம்
....ஹோதாரம் ரத்ன தாதமம்..
காதலே இங்கு "ரிக் வேதம்"
இதற்கு பாஷ்யம் எழுத‌
இரண்டு சிட்டுகள்
ஒட்டி ஒட்டி
உதடுகளால்
ஸ்லோகங்கள் எழுதின.
தமிழென்றல் அது
இனிமைக்கடல்.
மற்ற மொழியில்
உப்புக்கரிக்கும்
அலைகளின் கடல்.
எல்லாம் சுவை தான்.
ஆதலினால் காதல் செய்வீர்!

__________________‍‍‍‍‍‍‍‍‍‍_______‍‍‍‍___________________


Friday, January 29, 2016

காதல் போயின்.... காதல் போயின் ....



காதல் போயின்.... காதல் போயின் ....
============================================ருத்ரா இ.பரமசிவன்

நாளும் மடி மேல் இருக்கும்
நல்ல பாம்பே
இந்த நல்ல பெயர் வைத்தது யார்
சொல்லு பாம்பே.
தீண்டியது நீ அல்ல
நாங்கள் தான்.
சீண்டியதும் நீ அல்ல
நாங்களே தான்.
"பூலியன்" புதிர் கணிதம்
எண்களிலே
அதை
மின் கணிதம் ஆக்கி
மிகைப்படுத்தி
நுண்மை உலகம் புகுந்து விட்டோம்.
உன் துடிப்புகள் உள்ளே
துடிப்பு வைத்து
சுரங்கம் வெட்டி
குகை செய்தோம்.
வழி எங்கே ? வாசல் எங்கே ?
ஒளி ஒன்றும் தெரிய வில்லை.
அறிவுக்கடல் அத்தனைக்கும்
ஒரு மின் சொட்டு போதும் என்றாய்.
ஒரு "ஷேக்ஸ்பியரையோ"
ஒரு "கபிலனையோ"
ஒரு  "ஐன்ஸ்டீனையோ "
ஒரு "சர்.சி.வி.ராமனையோ "
கருப்பைக்குள் கொண்டு வர
பில்லியன் பில்லியன் கருப்பைகள்
தேடி தேடி சலித்திட்டோம்.
கலை வாணியும் விட்டெறிந்தாள்
கட்டை வீணை வேண்டாம் என்று.
ஓட்டைக்கூரை  என்றாலும்
பள்ளிகள் தோறும் பள்ளிகள் தோறும்
மடிக்கணினிகள் மழைகள் தான்.
கல்வியின் மூச்சுக்காற்றினிலும்
காசுகள் மட்டுமே உயிராச்சு.
இளசுகள் காதுகள் வாய்கள் எல்லாம்
டிஜிடல் உணவே காதல் செய்யும்.
மைவிழிகள்  குறு குறுக்கும்
மரகதக்காட்சிகள்
மலடு தட்டி
மண்ணில் சரிந்து கிடக்கின்றோம்.
"காதல் போயின்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்."
பாரதியும் இதைத்தான்
பாடிச்சென்றானோ ?

==============================================




தாமிரபரணி



தாமிரபரணி
=========================================== ருத்ரா இ.பரமசிவன்

தாமிர பரணி என்றால்
நெஞ்சமெல்லம்
நெக்குருகும்.
அந்த பளிங்குப்பாய் விரிப்பில்
குளிக்கிறேன் என்ற பெயரில்
புரளும்போது
கல்லிடைக்குறிச்சி என் மனதோடு
என் அடிஉள்ளத்தில்
அச்சடிக்கப்பட்டுவிடுவதை
உணர்கிறேன்.
எதிர்க்கரையில்
தூரத்து
"ஊர்க்காடு சாத்தாங்கோயில் சிலை"
நிமிர்ந்து மீசை முறுக்கி
முண்டைக்கண் துருத்துவது கூட‌
இந்த தண்ணீருக்குள்
குமிழியிட்டது.
நீர்க்காக்கைகள் போல
தலை நீட்டி
தலை நீட்டி
அந்த நீல வானத்தையும்
அதனோடு தழுவிக்கிடக்கும்
அந்த மருத மரங்களையும்
பார்க்கும் போது
நம்மையும் சேர்த்து
யாரோ ஒரு ரவி வர்மா
ஓவியம் தீட்டுவது போல் இருக்கும்.
அவன் புருசுகள்
என் மூக்கு நுனியில்
கிச்சு கிச்சு மூட்டும்.
இந்த தாமிர பரணிக்குள்
எத்தனை கலிங்கத்துப்பரணிகள்?
பருங்கண் நண்டு கெழுத்தி மீனை
கொடுக்கு கொண்டு தாக்கும்.
கட்டம் கட்டமாய் சட்டை போட்ட‌
ஒரு தண்ணீர்ப்பாம்பு
அங்கு விழுங்க வரும்.
சற்று தூரத்திலேயே
நீலமும் சிவப்புமாய்
ஒரு மீன் கொத்தி
விருக்கென்று நீருக்குள் விழுந்து
சரக்கென்று பறக்கும்
வாயில் துடிக்கும் மீனோடு.
நான் அந்த ஊமை மருதமரங்களை
உற்று உற்று பார்ப்பதுண்டு.
அதன் கிளை இலை பின்னலில்
ஒரு முகம் தோன்றுவதுண்டு.
தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போதெல்லம்
அதை நான் பார்த்திருக்கிறேன்.
இதே ஆறு
சிந்து பூந்துறையில்
வைரப்படுகையாய்
வலம் வரும்போது
அந்த மாபெரும் எழுத்தாளன்
புதுமைப்பித்தனுக்கு
பேனாவும் பேப்பருமாய்
எடுத்துக்கொடுத்திருக்கிறது.
கயிற்றரவு என்ற கதையில்
வாழ்க்கையும் மரணமும்
கயிரும் பாம்புமாய்
தோன்றி தோன்றி அலைக்கழித்ததை
அந்த பனங்குட்டிகளின்
பின் புலத்தில்
தரிசித்ததை எழுதியிருக்கிறான்.
இந்த மருதமரங்களும்
ரவி வர்மாவின் வர்ணக்குழம்பில்
அந்திச்சிவப்பை பூசிக்கொள்கிறது.
காலைப்பருதியில் மஞ்சள் பூசிக்கொள்கிறது.
அந்த முகம் மட்டும்
புதிராய் தோன்றுகிறது.
உச்சியில் நாரைகள் அலங்கரிக்க‌
ஒரு மூடு திரையில்
நெளியல் உருவமாய்
தாமிர பரணிக்குள் பிம்பம் காட்டி
அந்த பிம்பபிழம்பில்
எல்லாவற்றையும் பிசைந்து
ஒரு மாயப்பிரபஞ்சம் காட்டுகிறது!

========================================================

குவியல்




குவியல்
                                          ========================ருத்ரா இ.பரமசிவன் 

இருளைத் தின்றது தீயா?
தீயைத் தின்றது இருளா?
கேள்விகள் தான் எரிகின்றன.
மெழுகுவர்த்தியின் 
வெள்ளை லாவாவில் 
இருளின்  உறை பிணம் .
ஒளியின் உறைவிடம்.
சிந்தனைக்குழம்பில் 
ஒரு சிற்றில் விளையாட்டு.
இன்னும் இன்னும்... 
விடைகள் 
எங்கோ ஆழத்தில் !
சுரங்கம் வெட்டி வெட்டி
மண் குவித்துப்போட்டதில்
இமயமலைகள் கூட‌
சிறு கடுகு ஆனது.
ஞானம் அவ்வளவா 
நான் பெற்றேன்?
என்று இறுமாந்தேன்.
மண்குவியல்
என்னை 
எள்ளி நகைத்தது.
"இவ்வளவும்
உன் அஞ்ஞானம்."
என்றது.
===========================================

Wednesday, January 6, 2016

ஊர்கின்றோம்.


ஊர்கின்றோம்.
=================================================ருத்ரா இ.பரமசிவன்


கலிபோர்னியா
சான் ஓஸே யில் ஒரு பூங்கா .
கழுத்து நீண்ட கொக்குகளாய்
மெக்ஸிகோ பனைமரங்கள்.
ஒளிக்கண்கள் இரண்டு
உறுத்து விழிக்க
அந்தியின் கருநீலச்சித்திரம் .
எந்திரமாய் கசக்கிப்பிழிந்த பின்னும்
மிச்சமாய் தேறும்
தேன்  சொட்டுத்தருணங்களுக்கு
பூங்காவின் புல் விரிப்பு
தேடி வந்திருப்பவர்கள்.
"முட்புதர்கள் முட்புதர்கள் ..
நாம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம்
ஆம் வட்டமடித்துக்கொண்டிருக்கிறோம்
அதி காலை ஐந்து மணியிலிருந்தே"
டி .எஸ்.எலியட்டின்  கவிதை வரிகள்.
அந்த ஐந்து மணி அலாரத்திலிருந்தே
நம் அன்னையர்களின்
சொர்க்கவாசல் கதவு திறந்து
வழி அனுப்பி வைத்தது.
நரகங்களை நம்மில் பிரசவித்த நாம்
சொர்க்கத்து மர  நிழல் தேடி
அந்த கோணிய வாய் ஒட்டகங்களோடு
பாலைவனம் ஊர்கின்றோம்.

========================================



Tuesday, January 5, 2016

உட்பொருளின் உட்பொருள்





உட்பொருளின் உட்பொருள்
====================================================ருத்ரா

பனி தூவும் காலையில்
நடை பயின்று கொண்டிருந்தேன்.
புத்தாண்டு
தன் அரிதாரங்களையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய்
களைந்து விட்டிருந்தது.
காலத்தின்
காண முடியாத சித்திரத்தை
காலண்டர் தாள்களில்
நாம் அடுக்கி அடுக்கி
என்னத்தைக்கண்டோம் ?
ஒரு சொட்டுப்பரவசத்திற்கு
"வாங்க வாங்க " "குடம் நிறைக்கும் "
கண்ணீர்ப்பசுக்களாய்
அங்கும் இங்கும் ஓடுகிறோம்.
பிறப்பை அறு அறு
என்று
பஜனை ரம்பங்களால்
நம் ஆத்மா
ரத்த வெள்ளத்தில்
கிடந்தது தான் மிச்சம்.
உட்பொருளின் உட்பொருள்
அப்பொருளின்  உட்பொருள்
அதற்குள்ளும் ஒரு உருப்பொருள்
உருப்பொருளின்  கருப்பொருள்
..................
விஞ்ஞான மனிதன்
நுண்ணிதினும்
நுண்ணிதாய்
நுழைபுலம் சுருக்கினான்.
வைரஸ் உள்ளும் வைரச்சுரங்கம்
வெட்டி வெட்டி நுழைகின்றான்.
"தேடல்" என்பது
பிரபஞ்சங்களையும்
சுருட்டி சுருட்டி
அறிவின்
வாய் திணிக்கும்.
சுண்டல் அல்ல.
புளியோதரை அல்ல.
பிரசாதம்.
அந்த மின்னல் விழுதில்
உருகும் ஒளியின்
"குவாண்டம்" நெய் வழியும்
பிரசாதம் தேடி
அக்கோயில் நோக்கி நடக்கின்றேன்.