Sunday, October 4, 2015

மனவிளிம்பு






மனவிளிம்பு
========================================ருத்ரா இ.பரமசிவன்


மனவிளிம்பு ஓரத்தில்
நுரை ஜரிகையிட்ட
ஆயிரம் கனவுகள்.
கடற்குருகுகள்
வெள்ளித்திவலைகளை
மீன்கள் என்று எண்ணி
அலகு கவ்வி கவ்வி
களைத்தது போல்
நானும்
அவள்
மின்னல்  வெட்டுப்
பார்வைகளையெல்லாம்
அதே வைரத் திவலைகளில் தான்
என் மௌன வலை வீசி
பிடிக்கத்துடிக்கிறேன் .
யார் அவள்?
யாரோ ?எவளோ ?
மின்னலுக்கு முகவரி எது?
அந்த பார்வை மட்டுமே
இந்த வானம் முழுவதும்
இந்த கடல் முழுவதும்
பரந்து விரிகிறது!
எனக்கு தோன்றும்
முகத்தையெல்லாம்
செதுக்கிப்பார்க்கிறேன்.
அதோ அந்த குருகுகளைப்போல.
அவற்றின் அலகு உளிகள்
அந்த நுரையில் எதை செதுக்குகின்றன?
அவை ஒவ்வொரு தடவை
கொத்தும்போதும்
என் இதயம் வலிக்கிறது.
அவை என்றாவது ஒரு நாள்
அப்படி செதுக்கி செதுக்கி
அவள் முகத்தின் வடிவை காட்டிவிட்டால்...
வேண்டாம்..வேண்டாம் .
என்னால் தாங்க முடியாது .
முகம் தெரியவே வேண்டாம் .
வேண்டாம் ..வேண்டாம்.
கைகளால்
அந்த குருகுகளை விரட்டுகின்றேன்.
அவை அங்கே தான் கொத்திக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் மீண்டும் விரட்டுகின்றேன்.
அவை கடலை நோக்கி பறக்கின்றன.
நானும் விடாமல் துரத்துகிறேன்
துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.
நீலக்கடல் முழுவதும் என்னுள் .
அந்த நீர்விளிம்பில்
கலங்கலாய்
சிவப்பாய்
ஒரு பிரம்மாண்ட செர்ரிப்பழம்.
அது சூரியப்பழமா !..
இல்லை
அவள் முகமா ?
தெரியவில்லை.
அந்த நீலக்கடல் முழுவதும்
என் இதயத்தின் மேல்.
அல்லது
என் உடம்பின் மேல்.
முள்ளு முள்ளாய் போர்த்த மீன் கூட்டம்
ஊசிப்பற்களால்
என்னை மொய்க்க
என் உடம்பு அங்கு மாயம்.
இருப்பினும்
அங்கு தான் என் இதயம்
ஆம்
இன்னும் அங்கு தான் என் இதயம்!

ஒவ்வொரு மாலையிலும்
அந்த கடற்கரையில் நடக்கின்றேன் ..
அந்த இதயத்தை தேடி...

=======================================================





என் இலட்சியம்.






என் இலட்சியம்.
========================================ருத்ரா

இது என்ன என்று எனக்குத் தெரியாது
இருப்பினும்
இந்த பிரம்மாண்ட பாறாங்கல்
என் தலை மீது ஏறியிருக்கிறது.
எப்படி ஏற்றினேன் என்றும் ஞாபகம் இல்லை.
இப்போது
முடியாது என்று கீழே போட்டாலும்
அதன் அடியிலேயே நான் நசுங்கிப்போவேன்.
இதை இறக்கிவிட எத்தனை ஆட்கள் கூப்பிடுவது?
அதோ அந்த அண்டவெளியில்
நின்று கொண்டு
இந்த பூமியை அப்படியே புரட்டி போடுவேன்.
அதற்கு ஏற்றாற்போல் நீங்கள்
எனக்கு ஒரு நெம்புகோல் தரமுடியுமானால்
என்றானமே ஆர்க்கிமிடீஸ்.
அவனை விடுங்கள்.
நம் செந்தில் (கவுண்டமணியின் கவுண்டர் பார்ட் தான்)
ஒரு படத்தில்
மலையை தூக்கிக்க்காட்டுகிறேன் என்று சொல்லி
"மோடி மஸ்தான் " வேலையெல்லாம் செய்து
கூட்டம் சேர்த்து
கடைசியில் சொல்லுவார்
யாராவது ஒருவர் வந்து
என்னுடன் ஒரு கை கொடுத்து
தலையில் தூக்கி வையுங்கள் பார்க்கலாம்.
அடுத்த கணமே
மலையை தூக்கிக்காட்டுவேன் என்பார்.
அது போல் தான்
இந்த பாறாங்கல்.
இறக்கி விடவோ
தூக்கி எறியவோ
கை கொடுக்க ஆளில்லை.
கனக்கிறது.
கழுத்து நரம்புகள் புடைக்கின்றன.
கண் பஞ்சடைக்கிறது.
மூச்சை அடைக்கிறது.
ஆனாலும் தம் கட்டுகிறேன்.


அதோ விழுகிறது.
பிடியுங்கள்! பிடியுங்கள்!
......
.......
தடால்..
பாறங்கல் அடியில்
கரப்பான் பூச்சியாய் நான்!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============================================================