Tuesday, November 25, 2014

கொள்ளைச்சிரிப்பு

2014-07-08_09-38-36_208.jpg



கொள்ளைச்சிரிப்பு
==================================================ருத்ரா


வெள்ளைச்சிரிப்பா?
கொள்ளைச்சிரிப்பா?
அன்றொரு நாள் நான்
சிறைப்பட்டுப்போனேன்.
மறுபடியும்
அதற்கு
உன் காதலின்
ஏழு மலை ஏழு கடல் எல்லாம் தாண்டி
"மாங்கல்யம் தந்துநானே" எனும்
தீவுக்குள் வந்து தேடுகின்றேன்.
உப்பு புளி மிளகாய்களின்
அஞ்சறைப்பெட்டிக்குள்ளா
வைத்திருந்தாய்?
தெரியவில்லை!
மழலை நந்தவனத்துள்
அது புதைந்தே போனது.
எத்தனை பாம்புகள்?
எத்தனை சட்டைகள் உரித்தன?
இன்னும்
நான் அதைப்பார்க்க வில்லையே.
வெள்ளிவிழுதுகள்
மண்டிய வயதுகளின்
ஆரண்யத்திலும் தேடுகின்றேன்.
எங்கு
அதை புதையல் ஆக்கினாய்?
அந்த உயிர் சுருட்டும் போதை
புகை நெளிவாய்
என்னை
பொல்லாத பாடு படுத்துகிறது?
எப்போது நான்
அதை பார்ப்பது?
வாக்கிங் என்ற புதிய பரிமாணத்தில்
தினம் தினம்
பூங்காற்றின் முகம் வருடித் தேடுகிறேன்.
மைல் கணக்கு பார்த்து
நான் நடந்ததின் நீளத்தை அடுக்கினால்
அந்த நிலாவுக்கே
முத்தம் கொடுத்துவிட்டு
இந்நேரம் திரும்பியிருக்கலாம்..
அதோ
அங்கே தெரிகிறதே.
சட்...
"என்னா பெரிசு ..பாத்துப்போ"
அவன் அடித்துப்போட்டுவிட்டு
பைக்கில் விரைந்து விட்டான்.
தடுமாறி விழுந்து
கல்லில் அடிபட்டு...
ஆகா! இனிமை !இனிமை!
பார்த்துவிட்டேன்....ரத்தம் வழிய ...
அந்த பூக்களின் மீது விழுந்து கிடக்கிறேன்.
அந்த வெள்ளைச்சிரிப்பு இங்கேயா இருக்கிறது!
ஆனாலும் சிவப்பாய் சிரிக்கிறதே..
சாலையோரத்தில் எனக்கு விழுந்தது
முற்றுப்புள்ளியா? வியத்தல் குறியா?
கால சமுத்திரத்தின்
அடி ஆழத்தில் நான்..

"ஸ்கல் இஞ்சுரி..ஒன்றும் சொல்ல முடியாது"
டாக்டர் ஸ்டெத்தை சுருட்டி
பைக்குள் திணித்தார்.
கேவல்களின் காட்டுக்குள் நீ!
எப்போது  உன் முகத்தில்
நான்
அந்த வெள்ளைப்பூக்களை பார்ப்பது?

========================================================

Saturday, November 22, 2014

ஒரு சொட்டு கண்ணீர்




ஒரு சொட்டு கண்ணீர்
===============================================ருத்ரா இ.பரமசிவன்


அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக
என்னால் முடிந்தது.......


தென்னை மரங்கள் தலை சிலுப்பும்
அந்த சின்னத்தீவில்
எறும்புகளுக்கு கூட நோவும் என்று
மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட
துடைப்பம் கொண்டு கூட்டப்படும்
புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும்
அந்த பூமியில்
தமிழ் மொழி
எலும்புக்குப்பைகளாய்
எருவாகிப்போனதற்கு
என்னால் முடிந்தது .....

இங்கே காலி டப்பாக்கள்
தட்டி கொட்டி
விடுதலை கீதம் என்று
வீண் ஒலிகளை
கிளப்பிக்கொண்டு கிடக்கையில்
என்னால் முடிந்தது .....

தேர்தல் கால
பணங்காய்ச்சி மரக்காட்டுக்குள்
வாக்குறுதிகளின் மராமரங்களில்
அம்பு பட்டு அமுங்கிப்போன
குரல்வளைகளில் நெறிக்கப்பட்ட நிலையில்
என்னால் முடிந்தது .....

தமிழ்
இங்கே மரத்துப்போனது.
தமிழ்
இங்கே மரித்துப்போனது .
தமிழ்
இங்கே மக்கிப்போனது
என்ற அவலங்களினூடே
என்னால் முடிந்தது...
அந்த
ஒரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே.


Wednesday, July 23, 2014

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...

ருத்ரா எனும் ...
பரமசிவன் இசக்கி ஆகிய நான்
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணியின்
பளிங்கு சுவடிகளில் திளைத்து வந்தவன் .
திலகர் வித்தியாலயம் எனும் உயர்நிலைப்பள்ளியில்
இந்த பட்டாம்பூச்சியின்
புழுக்கூட்டு மண்டலம் உடைபடாமல் கிடந்தபோதும்
கற்பனையின் ஏழு வர்ண நெருப்பூற்றி வளர்த்தது
அந்த தாமிரபரணி தான்.

நீருக்கும் தாகம் உண்டு.
இனிக்கும் தமிழ் தாகம் இது.
தூரங்கள் தொலைத்து
அருகுவோம் வாருங்கள் .....தமிழ்
பருகுவோம் வாருங்கள் !

அன்புடன் ருத்ரா 

வாத்துக்குள் பூத்த நெருப்பு



வாத்துக்குள் பூத்த நெருப்பு
======================================================ருத்ரா

என்ன வெட்கம் அருகில் வாயேன்.

ஏன் அங்கேயே இரு.எல்லாம் எனக்குத்தெரியும்.

என்ன தெரியும்.

தெரிந்தது தெரியும்;அறிந்தது அறியும்.

ஏய்..இரு.நிறுத்து நிறுத்து..

இப்போதானே நீரில் குடைந்து நீரில் நெய்து

ஏதோ ஒரு மொக்கை போட்டாய்!

அது எங்கே?..காணோம்.

ஆமாம்..உனக்கு எப்போ பார்த்தாலும்

காதல் காதல் காதல் தானா?

சிறகு விரி.

சிறகு மூடு.

அது காற்று.உயிர்க்காற்று.

அதை உள்ளிழு..வெளியிடு.

ம்ஸ்ஸ்ஸ்...என்கிறாய்

அதுவே அன்னம் அதுவே ஹம்சம்.

தெந்தமிழில் அன்னம்.வடதமிழில் அம்சம்.

சிறகு உருவகம்.காற்று உணர்வகம். உயிர் உள்ளகம்.

உனக்கு வேண்டுமானல் காதல் என்று சொல்லிக்கொள்.

ராமகிருஷ்ண மடத்தில் வாத்து படம் தானே முகப்பு.

வாத்து மடையர்களுக்கு வேண்டுமானால்..அது

குவாக் குவாக் குவாக்..

குவாண்டம் விஞ்ஞானிகளுக்கு

அது குவார்க் குவார்க் குவார்க்

அப் டவுன் ஸ்ட்ரேஞ்ச் சார்ம் டாப் பாட்டம்.

துகள் சுழல்களில் மூவர்ண பிரபஞ்சம்.

கவுதம உவாச்ச‌

அப்புறம்

சுனத்குமார் உவாச்ச‌
.............

பரமஹம்ஸோம் பானுகோடி ப்ரதிகாஸம்..யேனேந்த வ்யாப்தம்...
.....
........

ஹம்ஸ ஹம்ஸேதி சதா த்யாயன்ஸர்வேஷு தேஹேஷு வ்யாப்த வர்த்ததே

சூரியனின் கோடி கோடி

ஒளிப்புருசுகளின் கற்றைகள்

வருடிய பெரிய்ய்ய்ய்ய்ய வாத்துச்சிறகுகள்

இந்த அண்டம்.

அது அன்னமா? சிரிப்பா?

காற்றா? உயிரா?

ஆழ்நினவின் முக்குளிப்பில்

உடல் எல்லாம் உயிர் எல்லாம் உணர்வு எல்லாம்

விரிகிறது விரிகிறது..

விரிந்து கொண்டே போகிறது.

இதை நாம் காதல் என்போம்...

வா..நீருக்குள்

அலகுகள் உரசி தீயின் முத்தம் களிப்போம்

குளிர் பூந்திளைச்சல்களில்...

இதம் ஹம்ஸோபனிஷதம் சமாப்தியே...

=========================================================ருத்ரா




Sunday, June 1, 2014

புகை




புகை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================ருத்ரா இ.பரமசிவன்

நெஞ்சுக்கூட்டின் 
பிருந்தாவனத்தில்
சிதை மூட்டவா சிகரெட்?

சூப்பர்ஸ்டாருக்கு 
குச்சி மிட்டாய்
உனக்கு மட்டுமே
கொள்ளி மிட்டாய்.

காதலிக்காக 
சிகரெட் பிடித்தான்.
உதிர்ந்த சாம்பல் எழுதியது.
ஐ லவ் யூ....

வாழ்க்கையை 
பற்றவைக்கும் முன்னே
சாம்பல் அவனை
தின்று விட்டது.

கொஞ்சம் எரிந்தாலும்
தீக்குச்சி தப்பித்துக்கொண்டது.
புகை
அவனை விழுங்கி விட்டது.

சவப்பெட்டி 
வியப்புடன் கேட்டது.
அந்த‌
சிகரெட் சர்க்கஸ்காரனா இவன்?

கதாநாயகி முகத்தில்
புகையை ஊதினான் கதாநாயகன்.
சும்மாச்சுக்கும் ஸ்லைடு உதட்டோரம்.
"...உடல் நலத்துக்கு கேடு"

விளம்பரத்திற்கு கூப்பிட்டிருந்தார்கள்
"எலும்புக்கூடு"கூட கேட்டது
அஞ்சு கோடி சம்பளம்.

இலை விரித்து பந்தி போட்டது
புகையிலை..அவனுக்கு
இறுதியாய் சுடுகாட்டில்.

நுரையீரலில் புற்று வைத்து
எழுதிய சிகரெட்டின்
வால்மீகி ராமாயணத்தில் ஒரே காண்டம்
சுடுகாட்டுக்காண்டம்.


===============================================ருத்ரா

Saturday, May 24, 2014

கனவுச்சதை பிய்ந்து ....

A BOOK OF VERSE 


SDC11897 (1).JPG
MY PHOYETOM (Photo in my poem) ...Photo in Horse shoe bend canyon in Aizona (USA)


கனவுச்சதை  பிய்ந்து ....
==================================ருத்ரா இ.பரமசிவன் 

என் ஆழத்தையே 
உற்றுப்பார்த்து அம்மாடியோவ் என்றேன் 
ஆழங்காணாத ஆழமா என் ஆழம் ?
தரையே தட்டாத ஆழமான ஆறு அது.
ஆனாலும்
ஒரு கவிதை கொண்டு துருவி 
வார்த்தை அர்த்தங்கள் 
பெருக்கெடுப்பதை பார்த்தால் 
அடர்ந்த சொற்களின் சுழி 
ரோஜாவைப் போலிருக்கும்.
கடுஞ்சிவப்பில் அதன் கண்ணீர்.
"காதல்" என்பீர் அதை,
எனக்கு அவை தருணங்கள்.
கனவுச்சதை பிய்ந்து 
என் ஆத்மாவின் துளைகளும்  கசிவுகளுமாய் 
என் தருணங்கள் அவை.

----------------------------------------------------------------------------------
இது எனது "ஃபொயெட்டம்" (ஃபோ ட்டோ +போயெம் )













Friday, May 23, 2014

"ஊமைப்படம்"





"ஊமைப்படம்" 
===============================ருத்ரா இ.பரமசிவன் 

அவள் இரைந்து கத்தினாள். 
பற்கள் கடித்தாள். 
மார்பில் கைகளை அடித்துக்கொண்டாள். 
ஆக்ரோஷம் ஆக்ரோஷம். 
டிஃபன் தட்டை ணங்கென்று 
வைத்த போதும் 
காஃபிக்கு நுரை மகுடம் சூட்டி 
சூடாகவே தந்தபோதும் 
அவள் உடம்பு நடு நடுங்க 
குரல் எழுப்பினாள். 
கண் விழிகள் 
கரும் கடுவாயின் 
வெள்ளை விழிகளையும் 
துப்பாக்கி குண்டுகளைப்போல‌ 
க‌ருங்க‌ன‌ல் துண்டுக‌ளையும் 
ப‌ட‌ம் காட்டின‌. 
புள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள் 
இருந்துகொண்டு 
கொசுவ‌த்தை சொடக்கு போட்டு 
பேசிக்கொண்டே போனாள். 

நான் "ம்யூட்டிங்கில்" 
இருந்தேன். 
"முப்பது"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம் 
ஓடிக்கொண்டிருந்தாலும் 
அவ‌ள் முக‌ ந‌ர‌ம்புக‌ள் 
எரிம‌லையின் வ‌யிற்றைத் 
திருகி திருகி ஃபிடில் 
வாசித்த‌து. 
வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய் 
அவ‌ள் மீது 
என்ன‌ சொல்லை வீசியிருப்பேன்? 
இந்த‌ எதிர்வினைக‌ளின் க‌ன‌ல்ப‌ரிமாண‌த்தை 
வைத்து 
நியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு 
கேட்டேன். 
அந்த நேரான‌ சொல் தான் என்ன‌?. 
சொன்னவன் எனக்குத் தெரியாதா? 
இருந்தாலும் கேட்டேன். 
முக‌ம் க‌ழுவிக்கொண்டு 
அமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன். 

அவ‌ள் 
இன்னும் அம்புப்ப‌டுக்கை த‌யார்செய்து 
அதில் 
ர‌த்த‌மாக‌த்தான் ச‌த்த‌ம்போட்டாள். 
நான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன். 
மீண்டும் அமைதியாய் 
முக‌ம் துடைத்துக்கொள்ள‌ 
க‌ண்ணாடி பார்த்தேன். 
ட‌ப்பென்று க‌ண்ணாடி சித‌ற‌த‌ல்க‌ள். 
கீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம் 
துண்டு துண்டாக‌ தெரிந்த‌து. 
குரூர‌க்கோரைப்ப‌ல் தெரிந்த‌து. 
ர‌த்த‌ம் சொட்டிய‌ ச‌வுக்கு 
என் க‌ழுத்தில் வ‌ல்லாட்டுபோல் 
தெரிந்த‌து. 
நாகரிகத்தில் 
முடி சூட்டிக்கொண்ட‌ 
என் அகலமான‌ 
ஸ்மார்ட் ஃபோன் 
கீழே விழுந்து கிட‌ந்த‌து. 
அத‌ன் "அண்ட்ராய்டு"க்குள் 
வ‌ரை 
அந்த‌ அசிங்க‌த்தின் கோர‌ம் 
வ‌ர்ண‌மாய்த் தெரிந்த‌து. 


================================ருத்ரா இ.பரமசிவன்

13 ஜூன் 2013

Wednesday, May 21, 2014

யானைமலை

Yanaimalai Hills
படம்  நன்றி   கூகிள் இமேஜஸ் 


யானைமலை 
===================================================================ருத்ரா இ.பரமசிவன்


மதுரையே இங்கு
கல்லாய் விறைத்து
உயரமாய்
படுத்திருப்பதை
பார்க்க கொள்ளை அழகு.

அந்த மத்தகம்
பரந்த ஒலிம்பிக் மைதானமாய்
கம்பீரமாய் காட்சி தரும்.
வெள்ளை வெயில்
தினமும் குளிப்பாட்டும்
சுகத்தில்
அந்த‌ க‌ருங்க‌ல் கூட‌
கருப்பு வெல்வட்
ச‌தைச்சுருக்க‌மாய்
தும்பிக்கை நீட்டிக்கிட‌க்கும்.

சென்னை போகும்
பேருந்துக‌ள்
அதை உர‌சி உர‌சி
செல்லும்போது
அந்த‌ கிச்சு கிச்சு மூட்ட‌லில்
பொசுக்கென்று
அது எழுந்துவிடுமோ
என்றும்
ஒரு ப‌ய‌ம் வ‌ருவ‌துண்டு.

இந்த‌ ஆண்யானைக்கு
திருப்ப‌ர‌ங்குன்ற‌ம்
மொக்கைக்க‌ல் ம‌லை
ஒரு பெண்யானையாய்
தெரிவ‌தால்
க‌ல்லின் ஏக்க‌மும் புரிகிற‌து.

ம‌ழைக்கால‌த்து
நீர் விழுதுக‌ள்
க‌ண்போல் தெரியும்
குழிக‌ளிலிருந்து க‌சியும் போது
ம‌த‌ம் பிடித்து
அது பிளிறும்
ஊமைத்த‌ன‌மான‌
டெசிப‌ல்க‌ள்
ம‌துரைக்கார‌ர்க‌ளின்
ம‌ன‌த்தில் ம‌ட்டுமே
ப‌திவாகும்.

க‌ல்யானைக்கு
க‌ரும்பு ஊட்டிய‌ ப‌ட‌ல‌ம்
ம‌துரை மீனாட்சிய‌ம்ம‌ன்
கோயிலுக்குள் உண்டு.
அந்த‌ க‌ரும்புக்கும்
எச்சில் ஊறி
எழுந்துவிடும்
ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பு கூட‌
அந்த‌ க‌ல் உட‌ம்பில்
விடைப்ப‌து போல்
என‌க்கு தோன்றுவ‌து உண்டு.

அன்பே சிவம்
என்று கோவிலுக்குள்
மணிஒலி கேட்டபோதும்
அன்பு தான் இன்ப ஊற்று
என்று ஒலித்தவர்களை
ஒழித்துக்கட்டும்
கழுமரங்களை
நட்டு வைத்த
ஆட்சியின் அடையாளங்கள்
இந்த‌ கல்லில்
உறைந்து கிடக்கின்றன.

அந்த சமணர் சிற்பங்கள்
இந்த‌ கல் தோலில்
இருப்பது தெரிந்தால்
அதை "தோலுரித்து"
வதம் செய்ய‌
மீண்டும் அந்த சிவன்
"ரௌத்திரம்" காட்டுவானோ?

மாடு க‌ட்டி போர் அடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை க‌ட்டி போர‌டித்த‌
தென்ம‌துரையின்
தொன்மை காட்டும் சின்ன‌மோ
இந்த‌ யானைம‌லை?

கோசாகுள‌ம் புதூரில்
இருந்து பார்க்கும் போது
ஒரு கோண‌ம்.

வ‌ண்டியூர் க‌ண்மாய்க்
க‌ரையோர‌ம் ஒரு கோண‌ம்.
அழ‌க‌ர் கோயில் சாலையில் இருந்து
ப‌க்கவாட்டில் ஒரு கோண‌ம்.

ஒத்த‌க்க‌டைக்கார‌ர்க‌ளுக்கோ
அது
த‌ன்னுட‌னேயே த‌ங்கி
படுத்திருப்பது போல்
ஒரு பிரமையின் கோணம்.

முன்கால் வைத்து
பின்வால் நீட்டி
தும்பிக்கையை கூட‌
வாய்க்குள் திணித்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
சாவ‌காச‌மாய்
குத‌ப்பிக்கொண்டிருக்கும்
ஒரு நுட்ப‌மான‌ கோண‌ம்.

நாக்கு சிவ‌ந்திருக்கிற‌தா
என்று அது
ப‌ளிச்சென்று துப்பிக் கேட்கும்
அந்த‌ சூரிய‌னிட‌ம்!
சிவ‌ப்பாய் த‌ன் மீதே
உமிழ்ந்து கொண்ட‌து போல்
வைக‌றையும் அந்தியும்
எதிர் எதிர் கோண‌ங்க‌ளில்
காட்டும்
தொலைதூர‌ ம‌துரையின் க‌ண்க‌ளுக்கு
எப்போதுமே
அற்புத‌ விருந்து தான்
அந்த யானை மலை!

எங்கள் வரலாற்றின்
உயிர்ச்சிகரமாய்
ஓங்கி நிற்கும்
வாரணமே!

உன்னை
பாளம் பாளமாய் அறுத்து
அந்த எண்ணெய் தேசங்களுக்கு
விற்று
டாலர்கள் குவிக்க நினைக்கும்
வணிக வல்லூறுகள்
வட்டமிடுவது
உனக்குத்தெரியவில்லையா?

உன் தும்பிக்கைக்கு
உயிர் வ‌ர‌ட்டும்
அந்த "தாராள‌ம‌ய‌ வேதாள‌ங்க‌ளை"
பிடித்து சுழ‌ற்றி அடிக்க‌ட்டும்.

இருப்பினும்
இன்னொரு ஆப‌த்தும் இருக்கிற‌தே!
உன‌க்கு உயிர் வ‌ந்தால்
உன் தும்பிக்கையை
எப்போதும்
நீட்ட‌ வைத்து விடுவார்க‌ளே
நாலணாவுக்கும் எட்ட‌ணாவுக்கும்
உன்னை
ச‌லாம் போட‌
வைத்து விடுவார்க‌ளே!

எங்களுக்கு
நாலு வர்ணம்
தீட்டியது போதாது என்று
உன்
முக அலங்காரத்துக்கும்
மூவர்ணம் தீட்டி
வடகலையா? தென்கலையா?
என்ற வாதங்களின்
பட்டி மன்றம் ஆரம்பித்து விடுவார்களே!

க‌ல்லில் ம‌றைந்து கிட‌க்க‌ட்டும்
அந்த‌ மாம‌த‌ யானை!
கல்லையே மறைக்கும்
அந்த மாமத யானைக்கு
கல்லறையாகிடு கல் யானையே!
கல்லறையாகிடு கல் யானையே!



=====================================================ருத்ரா
: 07-04-2012   19:42:23

"நிர்மால்ய‌ம்"


நாள் : 20-10-2011   11:24:36


"நிர்மால்ய‌ம்"
===============================================ருத்ரா
அந்த
நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள்
வீட்டு வாசல் த‌ரையில்
சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு
ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய்
ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌.
எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து
நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின்
க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌.

வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம்
த‌ன் கிளையை
கார்ப்ப‌ரேஷ‌னுக்கு அறிவிக்காம‌ல்
விதி மீறி வெளியே நீட்டியிருந்த‌து.
அது விரித்த‌ பாய்
அங்கு "வாச‌ங்க‌ளின்"பிர‌வாக‌ம்.

அந்த‌ ப‌வ‌ள‌ப் பூ ம‌ழை பெய்த‌
அந்த‌ வாச‌லுக்கு
இணையாய்
எத்த‌னை வைகுண்டங்கள்
வாச‌ம் செய்தாலும்
பெருமாளே வேண்டாம் என்று
இங்கே வ‌ந்து ப‌ள்ளி கொண்டுவிட்டார்.
அவ‌ருக்கும் பிரம‌னை தாங்கிய‌
தொப்பூள் கொடியின்
பிர‌ச‌வ‌ நாற்ற‌ம் மூக்கைத்துளைக்கிற‌து.
ப‌வ‌ள‌ப்பூக்க‌ளின் அமுத‌ வாச‌மே
அவ‌ருக்கு இப்போது பிர‌ம்ம‌ சுவாச‌ம்.

வீட்டுக்குள்ளிருந்து
த‌டிம‌னாய் ஒரு குர‌ல்.
"முனிய‌ம்மா இன்னுமா நீ
வாச‌ல் பெருக்க‌லே?"
எஜ‌மானிய‌ம்மாவுக்கு
ல‌ட்சுமி உள்ளே வ‌ர‌வேண்டுமாம்.
வேலைக்காரி
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் நீர் தெளித்து
துடைப்ப‌த்தால்
ப‌வ‌ள‌ம‌ல்லிகைக்குப்பையை
பெருக்கித்த‌ள்ளினாள்.
முக‌த்தில் ப‌ட்ட‌
துடைப்ப‌க்குஞ்ச‌ங்க‌ள்
செய்யும் கிச்சு கிச்சு மூட்ட‌ல்க‌ளைத்
தாங்காம‌ல்
பெருமாளும் பாம்புப்ப‌டுக்கைக்கு
எழுந்து ஓடினார்.

========================================================ருத்ரா