Monday, September 21, 2015

முட்கள்


முட்கள்
    ===================================================================
ருத்ரா.இ.பரமசிவன்



முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
கடிகார வட்டத்தில்
அது என்னை
குத்தி குத்திப்புண்ணாக்கியது.
ஓரப்பார்வை பார்த்து பார்த்து
காக்கை தன் கூரிய அலகுகளால்
கொத்துவது போல்
என்னக்கிளறியது.
நான் ஒன்றும் காதலிக்காக‌
காத்திருக்கும் தவத்துக்காக‌
இப்படி கழுவேற்றப்படவில்லை.
கிரேக்கர்கள் 
மணற் கடிகையை
கவிழ்த்து கவிழ்த்து வைத்துப்பார்த்து
எத்தனை சாம்ராஜ்யங்களை
மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.
நான் 
குத்தொக்க குத்துக்கு சீர்த்தவிடத்தை
எதிர்பார்த்துக்   காத்திருக்கும்
கொக்கும் அல்ல.
2 நிமிடம் 41 வினாடிகள்
எனும் நீண்ட அனக்கொண்டா பாம்பு
என்னை விழுங்கி
என் கழுத்து வரை வந்து விட்டது.
அப்பப்ப!
எங்கே போய்விட்டாள்
என் இல்லத்தரசி?
பால் பொங்கி கீழே கொட்டிவிடப்போகிறது!
ஜாக்கிரதை!
என்று போய்விட்டாள்.
இன்னும் வரவில்லை.
நானும் கடிகாரவட்டத்தைப்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பால் கொதி வர‌
4 நிமிடம் ஆகுமாமே!
சப்பாத்திக்கள்ளியின்
அடர்ந்த முட்காட்டில் கிடக்கிறேன்.
காலத்தின் கூரிய முட்களையா
தினம் தினம் 
என் அன்புக்குரியவள் தாங்குகிறாள்!
ஐயோ ஐயோ..
அதற்குள் நுரை பொங்கி..
ஸ்டவ் எல்லாம் வழிந்து...
அந்த விநாடி முள்ளில் நான்
நார் நாராய் தொங்கிக்கிடக்கிறேன்.

====================================================


No comments:

Post a Comment